தெரிந்த ஊர் தெரியாத தகவல்கள் - கோயம்புத்தூர்


நான் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்த்தவன். என் நகரத்தை பற்றி இணையத்தில் தேடும்போது பல அறிய தகவல்கள் கிடைத்தன. சினிமா,தொழில்,கல்வி,வணிகம் என்று பல துறைகளில் தென்-இந்தியாவிற்கு முன்னோடியாக கோயம்புத்தூர் இருந்துள்ளது.சங்க காலத்தில் இருந்து இதற்கு பல சான்றுகளும் இருக்கிறது.நான் சேகரித்த செய்திகளை ஒரு சில பதிவுகளில் தருகிறேன்.


கோயம்புத்தூர் என்ற பெயர் வந்ததற்கு இரண்டு வகையான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. பல வெள்ளாளர்கள் புது ஊர்களைத் தோற்றிவித்து இருக்கிறார்கள்.இவர்களில் பலர் கோவன் என்ற பெயர் கொண்டவராக இருந்தனர்.அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட புத்தூர் தான் கோவன் புத்தூர் என்பது. அது மருவி கோயம்புத்தூர் என்று ஆயிற்று.
2. பழங்காலத்தில் இப்பகுதி பழங்குடியின வசிப்பிடமாக இருந்துள்ளது.அவர்களில் மிகுந்த வலிமையான,பெரும்பான்மையான கோசர்கள் இன மக்கள் கோசம்புத்தூர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்தனர்.இவர்கள் வாழ்த்த இடமான கோசம்புத்தூர் காலபோக்கில் பெயர் மருகி கோயம்புத்தூர் என்று அழைக்கப்படுகிறது.

Coimbatore


இப்பழங்குடிகளின் ஆதிக்கம் நீண்ட காலம் நீடித்து இருக்கவில்லை.இப்பகுதி இராஷ்டிரகுட் டர்களின் படையெடுப்பால் அவர்களின் வசமானது. இராஷ்டிரகுட்டர்களிடமிருந்து சோழர்களின் கைகளில் வீழ்ந்தது(9ம் நூற்றாண்டு). சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் கொங்கு மண்டலம் சாளுக்கியர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னல் வந்த பாண்டியர்களாலும்,ஹோசைலர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டது.பாண்டிய மன்னர்களுக்கிடையே ஏற்பட்ட உள்நாட்டு சண்டையினால் இப்பகுதி டில்லி முகலாயர்களிடம் வீழ்ந்தது.முகலாய மன்னர்கள் காலத்தில் ஆந்திர,கர்நாடக மக்கள் இங்கு குடிபெயர்தனர். பின்னர் மதுரை சுல்தான்களிடமிருந்து விஜய நகர ஆட்சியாளர்கள் இப்பகுதியை போரிட்டு வென்றனர்.1550களில் விஜய நகர பேரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயகர்கள் இங்கு குடியேறினர்.

முத்து வீரப்ப நாயகரின் ஆட்சிக் காலம் மற்றும் திருமலை நாயகர்கள் ஆட்சிக் காலத்திலும் ஏற்பட்ட உள் நாட்டு சண்டை,விட்டு விட்டு வந்த போர்களினாலும் விஜய நகர பேரரசு அழிவதற்கு காரணமானது.இதன் விளைவாக திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கொங்கு மண்டலம் மைசூர் ஆட்சியர்களின் கைகளில் வீழ்ந்தது.அவர்களிடமிருந்து ஹைதர்அலி இப்பகுதியை கைப்பற்றினர்.ஆயினும் 1799ல் மைசூரில் திப்பு சுல்தானுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியினால் கொங்கு மண்டலம் மைசூர் மாகராஜாவால் கிழக்கிந்திய கம்பெனிக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. இதற்கு கைம்மாறக திப்பு சுல்தானிடம் இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் மைசூர் மகாராஜாவுக்கு பிரிட்டிஷார் வழங்கினர்.அதிலிருந்து 1947ல் இந்தியா சுதந்திரம் அடையும் வரை கோவை மண்டல பகுதி பிரிட்டிஷாரின் முறையான நிர்வாகத்தின் கீழ் இருந்தது.


Coimbatore-Municipal


சில குறிப்பிட்ட இனத்தையோ , மொழியையோ சார்ந்த மக்கள் ஒரு ஊரில் வசிப்பது என்பது வெறும் 50 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட நிகழ்வு இல்லை என்பதற்கு கோவை ஒரு சிறந்த உதாரணம்.கோவையில் தெலுங்கு, மற்றும் கன்னடம் பேசும் மக்கள் அதிகம். இவர்கள் 14 ம் நூற்றாண்டு முதல் இங்கு வசிக்கின்றனர். தொடர்ந்து கொங்கு மாநிலம் பல மன்னருக்கு அடிமையாக இருந்ததால் அங்கு பேசும் தமிழில் மிக அதிகமான மரியாதை இருக்கும்( வாங்க, போங்க, உட்காருங்க) வேறு எந்த ஊரில் பேசப்படும் தமிழில் இவ்வளவு மரியாதை இருக்காது. எனவே ஒரு மொழிக்கும் அதன் ஆட்சிக்கும் கூட ஒரு முக்கிய தொடர்பு உள்ளது.

கோயம்புத்தூரின் பல இடங்களின் பெயர் எப்படி வந்தது என்ற சுவாரசியமான தகவல்களை காண்போம்.

ஒப்பணக்கார வீதி : விஜயநகர பேரரசில் சேனைகளில் வேலை பார்த்த பலிஜா சமூகத்தினர் பணம் ஒப்புவிக்கும் ( பணம் பட்டுவாடா) பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.அவர்கள்தான் இந்த பெயருக்கு காரணமான ஒப்பணக்காரனர்கள். பணத்தை ஒப்புவிக்கும் பலிஜா சமூகத்தினர் குடியேறியதால் ஒப்பணக்கார வீதி என்ற பெயர் வந்தது.

R.S புறம்: 1903ல் கோவையில் வேகமாகப் பரவிய பிளேக் நோயால் ஏரளமான உயிர்பலிகள் நிகழ்தன. எண்ணற்றோர் தங்கள் இருப்பிடங்களை காலி செய்து இடம் மாறினர்.மேலும்,மக்கள் நெருக்கம் மிகுந்த நகரில் சுகாதாரக் குறைபாடுகள் அதிகம் இருந்தது.எனவே நகரை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.அப்போது மேட்டுபாளையம் ரோடு மற்றும் தடாகம் ரோடுக்கு இடையே இருந்த பல நூறு ஏக்கர் நிலத்தை வாங்கிய நகரசபை நிர்வாகம் அதை மனைகளாகப் பிரித்தது.பின் அப்பகுதிக்கு கோவை நகராட்சி மன்றத் தலைவராக இருந்த இரத்தினசபாபதி முதலியாரின் பெயர் வைக் கபட்டது.ரத்தின சபாபதிபுரம் என்னும் பெயர் சுருங்கி ஆர்.எஸ்.புறம் என்று ஆயிற்று.

சபர்பன் ஸ்கூல்: பிளேக் நோய் காரணமாக நகரம் விரிவாக்கப்பட்டபோது ஆர்.எஸ்.புறம்,கெம்பட்டி காலனி,தேவாங்கப் பேட்டை உள்ளிட்ட புற நகரங்கள் உருவாக்கப் பட்டன.அந்த நாளில் பிராமணர்களுக்காக உருவாகப்பட்ட ராம்நகரும் கூட ஒரு புறநகரமே. அந்த புற நகரில் ஏற்படுத்தபட்ட பள்ளி என்பதால் சப்-அர்பன் பள்ளி என்று அழைக்கபட்டது.அது மருவி சபர்பன் பள்ளியாயிற்று.



சுக்கிரவார் பேட்டை& தேவாங்க பேட்டை:கன்னடம் மற்றும் தெலுங்கில் "சுக்கிர வராம்" என்றால் வெள்ளிக்கிழமை என்று பொருள்.கடைகள் நிறைந்த வியாபாரப் பகுதியை "பேட்டை" என்பார்கள். அன்றைய நாளில் வெள்ளிக்கிழமை தோறும் சந்தை கூடிய இடத்திருக்கு பெயர்தான் சுக்கிரவார் பேட்டை. தேவாங்க செட்டியார் அதிகம் வசித்த பகுதியில் நெசவுத் தொழிலும் புகழ் பெற்று விளங்கியதால் தேவாங்கப் பேட்டை ஆயிற்று.

டவுன்ஹால் : விக்டோரியா ராணி பதவியேற்று 50 ஆண்டுகள் ஆனதை நினைவூட்டும் வகையில் 1887ல் கோவை நகராட்சியின் மையப்பகுதியில் நகர மண்டபம் ஓன்று கட்டப்பட்டது. 1892 இல் திறக்கப்பட்ட அந்த மண்டபம் இருந்த இடம்தான் டவுன்ஹால் என்று அழைக்கப்பட்டது.

கோட்டை மேடு : டவுன்ஹால்க்கு பின்புறம் கோட்டை இருந்தது.பிரிட்டிஷ் மற்றும் மைசூர் படைகளுக்கு இடையே நடந்த யுத்தத்தில் சிக்கி அந்தக் கோட்டை சின்னபின்னமானது.1972ல் திப்புவின் உத்தரவின் பேரில் இந்த கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது.அந்த கோட்டை இருந்த இடம்தான் இன்றைய கோட்டை மேடு.

ராஜா வீதி : ஆசிரியர்ப் பயிற்சி பள்ளியும்,பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இயங்கும் கட்டடம்தான் அன்றைய மதோராஜா மஹால்.மைசூர் அரசின் அதிகாரியான அந்த மதோராஜா,அந்த வீதியில் குடியிருந்து ஆட்சி செலுத்தியதால் அந்த வீதிக்கு ராஜாவீதி என்று பெயர்.

காட்டூர் : அவினாசி ரோடு மேம்பாலம் முதல் வட கோவை சிந்தாமணி வரையில் முன்பொரு காலத்தில் பனங்காட்டுக் குளம் என்ற குளம் இருந்தது.நாளிடைவில் அந்த குளம் அழிய,குளமிருந்த இடத்தில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டன.நாளிடைவில் பனை மரங்கள் நிறைந்த காடாக மாறியதால் பனங்காட்டூர் என்றாயிற்று. நாளிடைவில் அது மருவி காட்டூர் என்றாயிற்று.


மீண்டும் ஒரு பதிவில் கோவை பற்றி சுவையான விசயங்களுடன் சந்திப்போம்.
தொடரும்.....

3 comments:

  1. மிக நன்று. மிக நன்றி.

    ReplyDelete
  2. என் பதிவை படித்ததற்கு மிக்க நன்றி. இன்னும் சில பதிவுகள் கோயம்புத்தூர் பற்றி எழுத உள்ளேன். தொடர்ந்து படிக்கவும்.

    Tamilaavanam.blogspot.com

    ReplyDelete
  3. Detailed information nice work ....thank continue your work..all the best

    ReplyDelete

 
  • தமிழ் ஆவணம்