சரசுவதி சமண தெய்வமா ?

0 comments

ஒரு அரசோ, மதமோ கட்டமைக்கப்படும்போது அதை சுற்றி / எதிர்க்கும் யாவும் அதனுள் கரைக்கப்படும் என்பது வரலாற்று நியதி.

அப்படித்தான் நம் நாட்டில் பல தெய்வங்கள் இறந்திருக்கின்றன சில தெய்வங்கள் வேறு பெயரில் புதிதாக பிறந்தன. திராவிட தெய்வமான மூதேவி மதிப்பிழந்து இரண்டு நூற்றண்டுக்குப்பின் சரஸ்வதி என்ற "வைதீக பெண் தெய்வம்" கோவிலுக்குள் நுழைக்கப்படுகிறது. 




தோற்றத்தில் வெள்ளை சேலை உடுத்திய சரசுவதி சமண மரபில் பிறந்த வாக்தேவி ( சொற்களின் தலைவி ) என்று தொ. ப குறிப்பிடுகிறார். இத்தெய்வம் சிந்தாமணி காப்பியத்தில் நாமகள் என்று குறிப்பிடப்படுகிறது. சமண மதத்திலிருந்து வைதீகத்தால் உருமாற்றம் செய்யப்பட்ட தெய்வம் சரஸ்வதி ( சரஸ் - பொய்கை பொய்கையில் வெள்ளை தாமரையில் வசிப்பவள் ) என பெயரிட்டப்பட்டு சைவ கோயிலில் நுழைக்கப்படுகிறாள்.

சமணர்கள்தான் முதலில் பள்ளி வைத்து கல்வியை போதித்தவர்கள். பல சமண பள்ளிகள் இன்று வைதீக கோவிலாக மாற்றப்பட்டுள்ளன.
உதாரணம் திருச்சி மலைக்கோட்டை (திரு -சிறார்- பள்ளி ) என்று அழைக்கப்பட்ட சமண கோயிலாகும்.

அதைபோல் விலை நிலத்தின் மூல காரணமான மூதேவி மதிப்பிழந்து பேரரசுகள் உருவாகும்போது செல்வத்திற்கும் விளைந்த நெல்லிற்கும் தெய்வமான இலக்குமி ( திருமகள் ) என்ற தெய்வம் உருவாக்கப்பட்டது.

செவ்வி : சமயங்களின் அரசியல் தொ.ப

தசாவதாரம் சொல்லும் வரலாற்று உண்மை

0 comments



தசாவதாரத்தின் முதல் அவதாரம் (நம்பி) கற்பனை கதையல்ல. அது ஒரு வரலாற்று கொடூரத்தின் பதிவாகும். பல்லவர் காலத்தில் எழுந்த சைவம், சோழர் காலத்தில் பெரிய மதமாக நிலைப்பெற்றது. 

சோழப் பேரரசு காலத்தில் 500 மேற்பட்ட சிவன் கோயில்கள் கற்கோயிலாக மாற்றப்பட்டன. இதற்கு தஞ்சை பெரிய கோவிலும் ,கங்கை கொண்ட சோழபுரமும் மிகச்சிறந்த உதாரணம். 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவனும் ,கோவிந்தராஜன் சிலையும் வழிபட்டு வந்தனர். ஆனால் சைவ ஆகம விதிப்படி, சிவன் கோயிலில் லிங்கம் மட்டுமே வழிபட வேண்டும். வேறு எந்த தெய்வமும் இருக்கக்கூடாது. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில்(1133 - 1150) தில்லையில் உள்ள கோவிந்தராஜன் சிலையை அகற்றி அதை கடலில் கரைத்ததாகவும் அது பின்நாளில் மேலே வந்ததாகவும் சொல்வார்கள்.

குலோத்துங்கன் காலத்தில் மக்களை மிக தீவிரமாக சைவத்திற்கு மாற்றினார்கள். அவன் காலத்தில்தான் நாயன் மார்களைப் பற்றி பெரியபுராணம் ( இயற்றியவர் சேக்கிழார் ) பாடப்பெற்றது.

வெறித்தனமான மத மாற்றத்திற்கு உதாரணமாக சைவத்தை பின்பற்ற மறுத்து, ராமானுஜரின் இடத்தை கூற மறுத்த கூரத்தாழ்வார் கண்கள் பிடுங்கப்பட்டன.வைணவ பெரியவரான ராமானுஜரை கொள்ள முயற்சிகள் நடைப்பெற்றன. வைதீகமும் வேதமும் கோயில்களை ஆட்டிப்படைத்தன. இந்த வரலாற்று கொடுமையின் மிகச்சிறந்த பதிப்புதான் அந்த முதல் அவதாரம்.

செவ்வி : விக்கி, இணையம், அறிவுக்கரசு

ராமர் பாலம் கற்பனையா?

0 comments

   

ராமர் பாலத்தை வைத்து மிகப்பெரிய அரசியல் தமிழ்நாட்டிலும், தேசிய அரசியலிலும் நடைபெற்று வருகிறது. ராமர் பாலத்தை இடிக்க கூடாது, அது இந்துகளின் மனதே புண் படுத்துகிறது என்று ஒரு சாரரும், தூத்துக்குடிக்கு கிடைக்க வேண்டிய வருவாய் எல்லாம் இலங்கைக்கு செல்கிறது, எனவே சேது சமுத்திர திட்டத்தை உடனே அமுல் படுத்த வேண்டும், ராமர் பாலம் கற்பனையே அது வெறும் சுண்ணாம்பு படிவு என வாதிடுவோரும் உண்டு. இதிலுள்ள அரசியலை தவிர்த்து பகுத்தறிவு வழியில் இதற்கான விடையை அறிவோம்.


17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.அப்போது மனிதனே இருந்திருக்க முடியாது. இலங்கையும் இந்தியாவுடன் இணைந்து குமரிக்கண்டமாக இருந்தது. அப்போது இந்தியாவிற்கும், இலங்கைக்கும் கடலே இல்லை. இதை பின் வரும் சான்றுகளுடன் நிறுவலாம்.

குமரியாறு தமிழகத்தின் தென்எல்லையாக இருந்தபோது தொல்காப்பியம் இயற்றப்பட்டது ( சுமார் 2400 ஆண்டுக்கு முன் ) பணம்பாரனார் எழுதிய தொல்காப்பிய சிறப்பு பாயிரத்தில்  தமிழ் எல்லைகள் கூறப்பட்டுள்ளன.

"வடவேங்கடந் தென்குமரி 
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து"

அவர் காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே கடல் இல்லை.(இதில் மேற்கும் கிழக்கும் கடல் இருந்ததால் எல்லைகள் குறிப்பிடப்படவில்லை).

பின்னர் வாழ்ந்த சிறுகாக்கை பாடினியார் காலத்தில் குமரியாற்றுக்கும்  இன்றுள்ள குமரி முனைக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி அழிந்து கடலே தென் எல்லையாக அமைந்ததே பின் வரும் பாடல் மூலம் அறியலாம்.

"வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத்
தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் 
வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த 
நாட்டியல் வழக்கம்"

இதையே சிலப்பதிகாரம்  வழிமொழிகிறது. சுமார் தொல்காப்பிய காலத்திற்கும், இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் குமரிக்கண்டம் நீரில் அழிந்து இலங்கை உருவான காலம் என்பது புலனாகிறது.

நாம் ராமர் பாலம் என்று சொல்லுவது வெறும் பாசி படிவ திட்டே ( Great Barrier Reef ) இது கடலில் 2300  KM பரவி உள்ளது என அறிவுக்கரசு நிறுவுகிறார்.

மொத்தம் 51 வகையான ராமாயணங்கள் உள்ளன அவற்றை தொகுத்து A.A மணவாளன் புத்தகம் எழுதியுள்ளார். சமகாலத்தில் எழுதப்பெறாத யாவும் கற்பனை கலந்த வெறும் கதையே என்பதற்கு ராமர் பாலம் மிகப்பெரிய சான்று.

செவ்வி : கால ஆராய்ச்சி ராசமாணிக்கனார் ,சுப.வீ கருத்தரங்கம்      

வரலாற்றை உற்று நோக்குவோம் : மூதேவி

0 comments



யாரையாவது வசைபாட மூதேவி என்ற சொல் அதிகமாக பயன்படும். என் பாட்டி மாலையில் விளக்கு போடு, இல்லையென்றால் மூதேவி வந்துவிடுவாள் என்பார்கள். அழுக்காக , நாற்றம் வீசுகிற , சோம்பலாக இருப்பவர்களிடம் மூதேவி வந்துவிடுவாள் என்னும் சொல்லாடல் உள்ளது. இது ஒரு வரலாற்று திரிபாகும்.

மூத்ததேவி என்ற சொற்பதம் மருவி மூதேவியாயிற்று. மூத்ததேவி திராவிட பெண் தெய்வம். சங்க காலத்திலிருந்த ஒரு பெண் தெய்வம். இலையும்,தழையும் , சாணமும், சேறுமான மண்சார்ந்த அழுக்கினை உரமாக மாற்றும் மூலவளத்தின் தெய்வம் மூத்த தேவியாகும்.

8ம் நூற்றாண்டின் பல்லவர்களின் தாய் தெய்வம். நந்திவர்ம பல்லவனுக்கு குலதெய்வம். வைதீக மரபை ஏற்காத குடவரை கோவில்களில் மூத்த தேவிக்கு சிலை உள்ளது. மூத்த தேவி ஜோஷ்டா தேவி ( வட மொழியில் மூத்தவள் ) என்றும் அழைக்கப்படுகிறாள். சங்க இலக்கியங்களில் இவள் மாமுகடி,தவ்வை, காக்கை கொடியோள், பழையோள்,சேட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறாள். 

வைதீக மதம் விரிவடையும்போது அதை ஏற்றுக்கொள்ளாத யாவும் அதனுள் கரைக்கப்பட்டு அதற்கு வேறு சாயம் பூசப்பட்டது (இழிவாக மாற்றப்பட்டது )  வரலாற்று உண்மை. உதாரணமாக " சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே" என்று மூத்ததேவி வறுமையின் சின்னம் என தொண்டரடிப் பொடி ஆழ்வார் நகை யாடுகின்றாள். குழந்தை வரம் தரும் தெய்வமாகவும், வண்ணார் தெய்வமாகவும் மூத்த தேவி இருந்தாள்.  

மூத்த தேவி கோவில்கள் ( வரலாற்று தொல்லெட்சம் )

1. திருப்பரங்குன்றத்தில்  குடவரை கோவில்
2. கங்கை கொண்டானுக்கு அருகில் ஆண்டிச்சிப்பாறை குடவரை கோயில்
3. காஞ்சி கைலாசநாதர் கோயில்
4. புதுகோட்டை மாவட்டம் காளியபட்டி சிவன் கோயில்
5. திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயில்
6. திரு கொண்டீஷ்வரம் பசுபதீஸ்வரர்  கோயில்
7. திருச்சி திருவனைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில்
8. கும்பகோணம் கும்பேசுவரர் கோயில்

  இது போன்று பல  தெய்வங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதில் மூத்த தேவியும் ஒன்று.
  

செவ்வி : Wiki , சமயங்களின் அரசியல் - தொ.பா

 
  • தமிழ் ஆவணம்